ஹரியானாவிலும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் பாஜகவின் சமீபத்திய தேர்தல் வெற்றிகளில் பெரும் சந்தேகம் எழுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களை போன்று ஹரியானா மாநிலத்திலும் பாஜக மெகா வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று பரபரப்பு குற்றம்சாட்டினார். பிரேசில் பெண் மாடல் பெயரில் அங்கு போலி வாக்குகள் உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி இதன் காரணமாகத் தான் ஹரியானாவில் காங்கிரசால் வெல்ல முடியவில்லை என்று தெரிவித்தார்.
பாஜக வெற்றியில் சந்தேகம்
இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் சமீபத்திய வெற்றிகளில் பெரும் சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள 'பச்சையான ஆதாரங்கள்' அதிர்ச்சியூட்டுகின்றன.
பாஜகவை மக்கள் நம்ப தயாராக இல்லை
வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவில்லை
இதன் அடுத்தகட்டம்தான் #SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles-உமே சான்று! இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?'' என்று தெரிவித்துள்ளார்.
