அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் என ஏராளமான அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவயடுத்து, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டனர். பங்காரு அடிகளாரின் பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் மேல்மருவத்தூருக்கு நேரில் சென்று இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டார்.

முன்னதாக, பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, 21 குண்டுகள் முழங்க பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

பங்காரு அடிகளார் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சம்.... பிரதமர், ஆளுநர், முதல்வர், இபிஎஸ் இரங்கல்

பங்காரு அடிகளார் உடலுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், ஜெகத்ரட்சகன், இசையமைப்பாளர் ட்ரம்ஸ் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

YouTube video player

தொடர்ந்து, ஆதிபராசக்தி கோயில் கருவறையை சுற்றி பங்காரு அடிகளார் உடல் எடுத்து செல்லப்பட்டது. ஆன்மிக பணியை தொடங்கிய இடத்திலேயே பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆதிபராசக்தி சித்தர் பீட தலைவரும், ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடல் கோவிலின் கருவறை - புற்று மண்டபத்திற்கு இடையே சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.