டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி சுதாவிடம் மர்ம நபர் செயின் பறிப்பு செய்துள்ளார். இச்சம்பவம் தூதரகம் அதிகம் உள்ள பாதுகாப்பு பகுதியில் நடந்துள்ளது. 

Congress MP Suda chain snatching : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் வழக்கறிஞர் சுதா, இவர் கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் தனது தொகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்காக மக்களவையில் பேசி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த சூழ்நிலையில் தற்போது நாடாளுமன்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்பி சுதா டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கிருந்து தினமும் காலை நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

காங்கிரஸ் எம்பியிடம் செயின் பறிப்பு

இன்றும் வழக்கம் போல திமுக எம்பி சல்மாவுடன் உடன் சுதா நடைபயிற்சி சென்றுள்ளார். இந்த நிலையில் செக் நாட்டின் தூதரகம் அருகே சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் காங்கிரஸ் எம்பி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயிலை பறித்துக்கொண்டு வேகமாக பைக்கில் பறந்துள்ளார். செயின் பறிப்பு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுதா கத்தியுள்ளார். ஆனால் மின்னல் வேகத்தில் அந்த நபர் மறைந்துள்ளார். இதனையடுத்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் எம்பி சுதா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

பாதுகாப்பு மிகுந்து பகுதியில் செயின் பறிப்பு

டெல்லியில் தமிழ்நாடு இல்லம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தூதரகம் இருக்க கூடிய இடமாகும். இந்த இடத்தில் பாதுகாப்பு பல மடங்கு உள்ள இடத்தில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் உள்ளவர்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில் எம்பியின் கழுத்தில் இருந்து செயின் பறிக்கப்பட்ட சம்பவம் போலீசாருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.