குழித்துறை தடுப்பணையில் விழுந்த இரண்டு இளைஞர்களை காப்பாற்றிய ஜான்சன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தடுப்பணையில் தவறி விழுந்த 2 பேர் - மீட்க சென்ற நபர் உயிரிழப்பு : தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல இடங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தடுப்பணை பகுதியில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த ஜான்சன் உடனடியாக தண்ணீரில் குதித்து இரண்டு சிறுவர்களையும் போராடி மீட்டுள்ளார். ஆனால் வெள்ளத்தின் வேகத்தில் ஜான்சன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக ஜான்சன் உடல் மீட்கப்பட்டுள்ளது.

குளித்துறை தடுப்பணையில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுவர்கள்

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகரம் கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது

சிறுவர்களை மீட்க சென்றவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு

தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட திரு.பீட்டர் ஜான்சன் இந்த நபர்களை காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளைஞர்களை காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள திரு.பீட்டர் ஜான்சன் அவர்களின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு ஓர் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர்

மேலும், பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, திரு.பீட்டர் ஜான்சன் என்பவரின் துணிச்சல் மற்றும் அவரது தியாக உணர்வைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.