அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு பதிலடியாக, தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் அரசியல் நாகரீகமற்ற செயல்களையும் அவர் கண்டித்துள்ளார்.
தமிழக அரசின் திட்டங்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஒருமையில் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை 90% மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றில் சில, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம். தமிழ்ப்புதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம்.
கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும்-48, மக்களுடன் முதல்வர். தொழில்துறை 4.0 திட்டம். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இல்லம் தேடி கல்வி, இப்படி நூற்றுக்கணக்கான சிறப்புத் திட்டங்களை வரிசைப்படுத்தி கொண்டே போகும் அளவிற்கு தமிழ்நாடு மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
கருத்து கணிப்பில் மீண்டும் திமுக
அதனால்தான் அண்மையில் 'இந்தியா டுடே' மற்றும் 'சி ஓட்டர்ஸ்' அமைப்பினர் நடத்தியக் கருத்துக்கணிப்பில் கடந்தாண்டு தி.மு.கழகத்திற்கு இருந்த மக்கள் செல்வாக்கு 47 சதவிகித்திலிருந்து 52 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும், இப்போது மட்டுமல்ல, எப்போதும் தேர்தல் நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், தி.மு.கழகம் அமோக வெற்றி பெறும் என்றும், Most Popular CM in Home State எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்தாண்டு பிப்ரவரி திங்களில் 36 சதவிகிதமாக இருந்த மக்கள் செல்வாக்கு, இந்தாண்டு பிப்ரவரி திங்களில் 57 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் இடம்பெற்றிருப்பது விஞ்ஞானப்பூர்வமாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம்
இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத அரசியல் அரவேக்காடு அண்ணாமலை தொடர்ந்து முதலமைச்சர் அவர்களையும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவர்களையும் ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும். நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு. மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவின்றி போய்கொண்டிருக்கிறது. திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி Shoe கால்களுடன் வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது.
நாவடக்கம் அற்றவர். அநாகரீகமானவர்
கார்ப்பரேட்களுக்கும். ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், முதலமைச்சர் பற்றியும், துணை முதலமைச்சர் பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும், அருகதையும் இல்லை. துணை முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் போன்ற அமைச்சர் பெருந்தகைகளை 'தற்குறி' என்று சொல்லுமளவுக்கு, கீழ்த்தரமாகவும், தற்குறித்தனமாகவும் செயல்படும் அண்ணாமலை நிலைக் கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும். நாவடக்கம் அற்றவர். அநாகரீகமானவர் என்பதை இடைவெளியில்லாமல் தொடர்ந்து நிரூபித் கொண்டிருக்கிற அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் காட்டமாக பதில் அளித்துள்ளார்
