கிட்னி முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தொடங்காதது ஏன்? என்று திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதே வேளையில் கரூரில் விசாரணையில் வேகம் காட்டுவாதாக அவர் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏழ்மையில் வாடிய விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களின் கிட்னியை விற்பனை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டு இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தை உலுக்கிய கிட்னி முறைகேடு

இதில் திருச்சியில் உள்ள மருத்துவமனை திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கிட்னி முறைகேடு விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கும்படி தமிழக அர்சுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணை தொடங்காதது ஏன்? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணையை ஏன் தொடங்கவில்லை?

இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

கரூர் சம்பவத்தில் விரைவாக விசாரணை

மாறாக, #KarurTragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது. ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?

ஸ்டாலின் அரசின் இரட்டை வேடம்

இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின் ஸ்டாலின்மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.