பாஜக தலைவராக ஓபிஎஸ்ஸும், பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்- ஜெயக்குமார் அதிரடி
2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தற்போது பாஜக தங்களுடன் கூட்டணியில் இல்லாததால் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
![Jayakumar said that BJP is responsible for AIADMK's election defeat KAK Jayakumar said that BJP is responsible for AIADMK's election defeat KAK](https://static-ai.asianetnews.com/images/01gzz8dnrahk73mpqg7qgbcfe0/ttv-dhinakaran_363x203xt.jpg)
பொது சிவில் சட்டம் அனுமதிக்க மாட்டோம்
டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆற்காடு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பலதரப்பட்ட கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது என தெரிவித்த அவர், பலதரப்பட்ட மக்களை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார்.
பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பத்து ஆண்டுகளில் எதையும் நிறைவேற்றாத நிலையில், ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே தேர்தல் அறிக்கை என்ற பெயரில் கண்களை திறந்து பார்ப்பார்கள் என்றும் விமர்சித்தார்.
அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம்
எதிர்காலத்தில் தமிழக பாஜக வுக்கு பன்னீர்செல்வம் தலைவராகவும், டிடிவி தினகரன் பொதுச் செயலாளர் ஆகவும் செயல்படுவது எதிர்காலத்தில் நடக்கப் போகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதிமுகவின் வாக்கு வங்கிகள் என்றுமே சரிந்தது இல்லை என்ற அவர், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு பாரதிய ஜனதா கட்சியை காரணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்ததால் கடந்த இரண்டு தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறியவர், தற்போது பாஜக தங்களுடன் கூட்டணியில் இல்லாததால் சிறுபான்மையினர் ஓட்டு அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கும் என்றும் கூறினார்.
பிராமணர்கள் ஓட்டு யாருக்கு.?
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கு மட்டுமே போட்டி என்று கூறிய அவர், அதிமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று மேல் இடத்தில் இருப்பதாகவும், பாஜக கீழ் நிலையில் இருப்பதாகவும், தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கும் பிராமணர்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு தான் வந்து சேரும் என்றும் அவர் கூறினார். பிராமணர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கீழ் நிலையில் இருக்கும் ஒரு கட்சிக்கு வாக்களித்து பிராமணர்கள் யாரும் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்