சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக, கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கொடுத்த புகாரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: விழாக்கோலம் பூண்ட வாரணாசி!

இதனிடையே, தான் கைது செய்யப்பட்ட முதல் இரண்டு வழக்குகளான பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியது, கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, பெண் காவலர்களை அவதூறாக பேசியது மற்றும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து கோவை குற்றவியல் நடுவர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீஸ் காவல் விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் அவரை சந்தித்துக் கொள்ள நிபந்தனை விதித்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.