டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசின் கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில், ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்புகளாக தயாரித்து தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் அனுப்பி உள்ளது.
தமிழக அரசு- ஆளுநர் மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநரை விமர்சித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென்றும் தமிழக அரசு புகார் தெரிவித்திருந்தது. இந்திநலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. தற்போது நான்கு உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு
இந்த இடத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்து ஒப்புதலுக்காக ஆளுநர் ரவிக்கு அனுப்பியது. இதனை கிடப்பில் போட்ட ஆளுநர் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கோப்பை திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியிருந்தார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டிருந்தார். நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார்.

ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர்
டி என் பி எஸ் சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளது, நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது என்பது அடங்கிய தகவல்களுடன் தமிழக அரசின் கோப்புகள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு முறை ஆளுநர் ரவி இந்த கோப்புகளை திருப்பி அனுப்பிய நிலையில் 3வது முறையாக தமிழக அரசு கோப்புகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
