வந்தவாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Vandavasi EX MLA Gunaseelan death : வந்தவாசி தொகுதி திமுக கோட்டையாகவே இருந்துள்ளது. அந்த வகையில் 6 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அதன் படி வந்தவாசி தொகுதியில் திமுகவின் கோட்டையை தகர்த்து வெற்றி பெற்றவர் செய்யாமூர் வே. குணசீலன், அப்பகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் தனது குரலை எதிரொலித்துள்ளார். அந்த வகையில் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவர் குணசீலன், இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை காலமானார் .
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இவரது மறைவு அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. மேலும் அவரது உடலுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ குணசீலன் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அனக்காவூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், வந்தவாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செய்யாமூர் வே. குணசீலன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அதிமுகவினர் இரங்கல்
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் திறம்பட ஆற்றிய ஆரம்ப கால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் குணசீலன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
