”No!! No !!” வெளிநாட்டு வேலை.. இந்த தவறை மறந்தும் கூட பண்ணாதீங்க.. எச்சரிக்கை விடுத்து டிஜிபி வீடியோ பதிவு
வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல், யாரும் வெளிநாடு செல்ல வேண்டாமென்றும் சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென்றும் டிஜிபி சைலேந்திரா பாபு அறிவுறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” திருச்சியைச் சேர்ந்த 'கேர் கன்சல்டன்சி' என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவன முகவர்களை தொடர்பு கொண்டு வேலை கேட்ட 18 பேரிடம், தலா ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வசூலித்துள்ளனர்.
பின்னர் 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காக்குக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மர் நாட்டுக்கு அவர்களை கடத்திச் சென்று, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மியான்மர் நாட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?
இது தொடர்பாக வழக்குப் பதிந்து, கேர் கன்சல்டன்சி நிறுவனத்தைச் சேர்ந்த முகவர்கள் ஹானவாஸ், முபாரக் அலி ஆகிய இருவர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல, மற்றொரு கும்பல், கம்போடியா நாட்டுக்கு சிலரை வேலைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தமிழக இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல், யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். மேலும், சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்.
மேலும் படிக்க:"சேலை தான் Modern Style"ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.. என்ன சொன்னார் தெரியுமா..?
இதுபோன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சந்தேகத்துக்குரிய முகவர்கள் குறித்தும் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் புகார் அளிக்கலாம். இப்பிரிவுக்கு 044-28447701 என்ற தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.