திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு அதனை செயல்படுத்த மறுப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் கைதையும் அவர் கண்டித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இதற்காக சென்ற இந்துமுன்னணியினர் மற்றும் பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கடுப்பான நீதிபதி தீபத்தூணில் இன்று மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தவிட்டார். இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி மறுத்த தமிழக அரசு

இதனால் மனுதாரர் மனுதாரர் ராம ரவிக்குமார், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர், இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் சென்ற நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை காட்டியும், சட்டம், ஒழுங்கை காரணம் காட்டியும் காவல்துறையினர் மலை மேல் அனுமதிக்கவில்லை. அத்துமீறி செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரையும், இந்து முன்னணியினரையும் காவலதுறையினர் கைது செய்தனர்.

திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இபிஎஸ், '' சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அடாவடித்தனம்

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு? மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்

உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது. மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.