பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ) கடல் நீரை குடிநீராக்கும் புதிய நவீன வடிகட்டியை உருவாக்கியுள்ளது. 

கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், ரோபோக்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. குறிப்பாக ஆபத்துகள் அதிகம் உள்ள சூழல்களில் ராணுவ வீரர்கள் பணியாற்ற வேண்டிய தேவையை குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

8 மாதங்களில் கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி

இது தொடர்பாக டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் நீரை குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மிக மெல்லிய வடிகட்டி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. கான்பூரிலுள்ள டி ஆர் டி ஓ ஆய்வகமான பாதுகாப்புப் பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DMSRDE), இந்த பாலிமெரிக் ஜவ்வு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்திய கடலோர காவல்படை (ICG) கப்பல்களில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு கருவிகளில் இப்புதிய நவீன வடிகட்டி பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் எட்டு மாதங்களில் இதனை உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

500 மணி நேர தொடர் சோதனை

டி ஆர் டி ஓ, இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் (OPV) இப்புதிய வடிகட்டி அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதன் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனினும், 500 மணிநேர தொடர் சோதனைக்குப் பிறகு அதற்கான முழு அனுமதி கடலோர காவல் படையால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.