'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
2020ஆம் ஆண்டு வெளியான 'நீர்வழிப் படூஉம்' என்ற நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தேவிபாரதியின் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பே கசித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தலைநகர் டெல்லியில் உள்ள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது. மார்ச் 12ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அனைத்து மொழிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
தமிழில் இந்த ஆண்டுக்கான விருது தேவிபாரதியின் மூன்றாவது நாவலான நீர்வழிப் படூஉம் நூலுக்குக் கிடைத்துள்ளது. குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப்பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவையும் இந்நாவல் சித்தரிக்கிறது.
பெசன்ட் நகர் கடற்கரையில் உலவும் விஷத்தன்மை கொண்ட ப்ளூ டிராகன்கள்!
"இந்த நாவலை முன்வைத்து இரண்டு விஷயங்களைப் பிரகடனம் செய்துவிடலாம். தமிழில் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக 'நீர்வழிப் படூஉம்' எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பது முதலாவது. சமகால உலக எழுத்தாளர்களின் வரிசையில் நாம் பெருமிதத்தோடு வைத்துப் பார்க்க இன்றைய தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி என்பது இரண்டாவது" என்று எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமி தெரிவித்துள்ளார்.
ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட தேவிபாரதி 1957ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பிறந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரது நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்களும் கவனம் பெற்ற முக்கியப் படைப்புகள். தேவிபாரதி எழுதிய சிறுகதைகள் Farewell to Mahatma என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன் ஜெயந்தன் விருது, அறிஞர் போற்றுதும் விருது மற்றும் தன்னறம் விருது ஆகியவை எழுத்தாளர் தேவிபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு தன்னறம் விருது வழங்கப்பட்டபோது தேவிபாரதி குறித்த ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
12/31/23: ஆண்டின் கடைசி நாளில் நிகழும் எண் கணித அதிசயம்! ஒரு நம்பருக்குள்ள இவ்வளவு இருக்கா!