தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி வீட்டின் அருகே இருந்த காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்ற நிலையில் மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவி மாயமானதைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவல் துறையினர், உறவினர்கள் தீவிரமாக தேடுதல் நடத்திய நிலையில் மார்ச் 11ம் தேதி சிறுமி காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய நிலையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ராஜபாண்டி பகுதியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரனை காவல் துறையினர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி விசாரணையை மே 21ம் தேதி நிறைவு செய்தனர்.

விசாரணைகள் அனைத்தும் 21ம் தேதி நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக தர்மமுனீஸ்வரன் குற்றவாளியென அறிவித்த நீதிமன்றம் இரு பிரிவுகளில் அவருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. குற்றம் நடைபெற்ற 75 நாட்களில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.