காமராஜர் இறக்கும் தருவாயில் கலைஞரை சந்தித்ததாகவும், கலைஞர் ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட அறை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சிவா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை பார்ப்போம். அதாவது காமராஜர் இறக்கும் தருவாயில் கலைஞரை சந்தித்தபோது இனி தமிழகத்தில் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என இருகரம் பற்றி கலைஞர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக பேசினார். இது வரலாற்று தவறு எனவும், அதேபோல பயணியர் விடுதியில் காமராஜர் தங்குவதற்காக தமிழக முழுவதும் கலைஞர் ஆட்சி காலத்தில் அப்போது குளிரூட்டப்பட்ட அறை ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்
காமராஜரை பற்றி தவறான செய்தியை பரப்பியதற்கு காங்கிரஸ் தரப்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
