உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும்,தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது என்றும் ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபாய் திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் கையெழுத்தானது. இதில் நோபல் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாய் மதிப்பு எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார துறை அமைச்சர்களுடன் ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.
இதில் , ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று, முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியன ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. துபாயை வெளிநாடாக நினைக்கமுடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். தமிழகம்- துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும்,தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது. ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக துபாய் திகழ்கிறது
தமிழகத்தில் துபாய் நிறுவனங்கள் தொழில் நடத்த ஏற்ற சூழல் நிலவுகிறது. இங்கு பெரிய கொள்ளளவு கொண்ட தூத்துக்குடி துறைமுகம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பர்னீச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டி அமைப்பு உள்ளது. தொழில் , ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகஅளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழகத்தை மாற்றுவதே எங்களின் இலக்கு. எனவே வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம். இணைந்து வளர்ச்சி பெறுவோம் என்று பேசினார்.
மேலும் படிக்க: ரூ 1,600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. முதலீட்டாளர்களுடன் உரையாற்றிய முதல்வர்..
