ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் கையெழுத்தானது. 

சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். இந்நிலையில் நேற்று காலை துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார துறை அமைச்சர்களுடன் ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுப்பட்டார்.இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

இதில் , ஐக்கிய அரபு நாடுகளில்‌ உள்ள குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்‌, புத்தாக்கம்‌ மற்றும்‌ புத்தொழில்கள்‌, தொழில்‌ சூழலை மேம்படுத்துதல்‌, விவசாயம்‌, உணவு பதப்படுத்துதல்‌, ஜவுளி மற்றும்‌ ஆடைகள்‌, நகை மற்றும்‌ விலையுயர்ந்த கற்கள்‌, மின்வாகனங்கள்‌, மின்னணுவியல்‌, மோட்டார்‌ வாகனம்‌ மற்றும்‌ வாகன உதிரி பாகங்கள்‌, பொறியியல்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில்‌ இணைந்து பணியாற்றி முதலீடுகள்‌ மேற்கொள்வதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டிற்கும்‌, ஐக்கிய அரபு நாடுகளுக்கும்‌ இடையே உள்ள பொருளாதாரம்‌ மற்றும்‌ வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதற்கு நிலவும்‌ சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ இரு அமைச்சர்களையும்‌ தமிழகம்‌ வருமாறு அழைப்பு விடுத்தார்‌. மேலும்‌, தமிழகத்தில்‌ தொழில்‌ தொடங்கிட, முதலீட்டாளர்கள்‌ சூழுவினையும்‌ தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌

சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். உலக அளவில் 192 நாடுகள் பங்கேற்கும் இந்த சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று துபாயில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட பேசிய முதலமைச்சர், முதல்வராக பதவியேற்ற பிறகு நான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். ஆனால் துபையை வெளிநாடாக கருத முடியாத வகையில் இங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கும் துபைக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபாய் வந்துள்ளதாகவும், இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் பேசினார். எஃகு தொழிற்சாலை மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க அந்நிய முதலீடுகளை ஈடுக்கும் வகையில், ரூ.1600 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அரபு தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழக முதல்வர் மேற்கொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில், ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் நோபல் குழுமம் சார்பில் 1000 கோடி ரூபாய் மதிப்பு எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.