TN Assembly : சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல பத்தாண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற முதியவர் தீக்குளித்தார். உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாமக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கண்ணையன் இருந்து வந்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவரது உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் , அரசைப் பொருத்தவரை மனிதாபிமான அடிப்படையிலேயே இருக்கிறோம். பொது மக்கள் அச்சப்படும் அளவிற்கு மாறவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதையோடு வீடுகள் ஒதுக்கப்படும். கோவிந்தராஜபுரம் பகுதியில் தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும். 

மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம். அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். 

இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இங்கே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்கிறபோது, அருகிலேயே, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார்கள். ஏற்கெனவே, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது' என்று கூறினார்.

இதையும் படிங்க : திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பாஜக MLA-க்கள்.. தூக்கிடலாமா ? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.பி !

இதையும் படிங்க : அச்சச்சோ.! பட்டின பிரவேசம் அடுத்த வருடம் நடக்காது.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன ஷாக்கிங் நியூஸ் !