NARI 2025 அறிக்கையின்படி, சென்னையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. 31 நகரங்களில் 21-வது இடத்தைப் பிடித்துள்ள சென்னை, தேசிய சராசரியை விட பின்தங்கியுள்ளது. பாதுகாப்பான உள்கட்டமைப்பு, கடுமையான நடவடிக்கைகள் தேவை என ஆய்வு கூறுகிறது.

இந்திய நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் குறியீடு (NARI 2025) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 31 நகரங்களில் சென்னை 21-வது இடத்தைப் பிடித்துள்ளது. 61.7% புள்ளிகளுடன் தேசிய சராசரியான 64.6%-ஐ விட சென்னை பின்தங்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் பெண்களின் பாதுகாப்பு

இந்த ஆய்வு, பெண்களின் பாதுகாப்பு உணர்வை பகல் மற்றும் இரவு நேரங்களில் கணக்கில் கொண்டு நடத்தப்பட்டது. இந்த அறிக்கை, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரால் புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

ஆய்வின்படி, சென்னையில் 54% பெண்கள் மட்டுமே தங்கள் நகரத்தைப் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இது தேசிய சராசரியான 60%-ஐ விடக் குறைவு. 33% பெண்கள் நடுநிலையான கருத்தைக் கொண்டுள்ளனர், 11% பேர் பாதுகாப்பற்றதாகவும், 3% பேர் மிகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்கின்றனர். இந்த இரு பிரிவினரின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் 75% பெண்கள் பாதுகாப்பாக உணர்ந்தாலும், இரவு நேரத்தில் இது 54% ஆகக் குறைந்தது. இரவில் 21% பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தனர்.

பொது இடங்களில் பெண்களுக்கான வசதிகள்

பொது இடங்களில் 46% பெண்கள் சென்னையில் பெண்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். 55% பேர் காவல் துறையையும் உள்ளூர் அதிகாரிகளையும் நம்புவதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உறுதியற்ற பதிலைத் தெரிவித்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டில், 7% பெண்கள் பொது இடங்களில் தொந்தரவுகளை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர். இது தேசிய சராசரியுடன் ஒத்துப்போகிறது. பெரும்பாலான தொந்தரவுகள் பொதுப் போக்குவரத்து, குடியிருப்பு பகுதிகள், மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ளன. சொல் வன்முறை மிகவும் பொதுவானதாக உள்ளது, அதைத் தொடர்ந்து உடல் ரீதியான தொந்தரவுகளும் பதிவாகியுள்ளன.

கடுமையான நடவடிக்கைகள் தேவை

தொந்தரவுகளை எதிர்கொண்டபோது, 54% பெண்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகவும், 48% பேர் போலீசில் புகார் அளித்ததாகவும், 13% பேர் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேயதாகவும் கூறியுள்ளனர். 15% பெண்கள் மட்டுமே குற்றவாளியை நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறார்.

பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, அதிக உதவி எண்கள், பதட்ட பொத்தான்கள், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளனர்.