சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வங்கியின் விற்பனை மேலாளர் மகேந்திர குமார், போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.76 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அவருடன் சேர்ந்து அவரது தாயார் விஜயலட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக இருப்பவர் வெங்கடேசன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை திருவொற்றியூர், கிழக்கு எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திர குமார் (34). இவர் அமைந்தகரையில் உள்ள எங்களது வங்கி கிளையில் விற்பனைமேலாளராக பணியாற்றி வந்தார். இவர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே எழுபத்தி ஆறு லட்சத்து 9,172 வரை கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பண மோசடி
எனவே, எங்களது வங்கியில் கடன் பெற்று வங்கிக்கும், பொது மக்கள் பணத்துக்கும் நஷ்டம் ஏற்படுத்தி பணம் கையாடல் செய்து சட்ட விரோதமாக சுயலாபம் அடைந்த மகேந்திர குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் விஜயலட்சுமி (54) ஆகியோர் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
தாய், மகன் சிறையில் அடைப்பு
அதன்படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், மகேந்திரகுமார் அவரது தாயார் உடன் சேர்ந்து விற்பனை மேலாளர் பதவியை தவறாக பயன்படுத்தி வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.