முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி பல்வேறு அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்து வந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. அதுமட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து தமிழக அரசு, ஆகஸ்ட் 30ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெற வேண்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? கேள்வி எழுப்பிய நீதிபதி முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல் துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.