கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராய மரணம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாராயம் குடித்த 6 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் மலைப்பகுதியில் மறைத்து வைத்து காய்ச்சப்படும் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் கள்ளச்சாராய மரணம்
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி என குறிப்பிட்டுள்ளார்
ஜாமினில் வெளிவந்து கள்ளச்சாராயம் விற்பனை
தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு? 66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளச்சாராயம்- பணத்தில் யாருக்கெல்லாம் பொறுப்பு
கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும் என அண்ணாமலை அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
