திமுக அரசுக்கும் தமிழக பாஜக எம்.எல்.ஏ. மகனுக்கும் என்ன டீல்? அறப்போர் இயக்கம் கேள்வி!
திமுக அரசுக்கும் தமிழக பாஜக எம்.எல்.ஏ. மகனுக்கும் என்ன டீல் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவவர்கள் சேர்ந்து சென்னை ஆற்காட் ரோட்டில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை ராதாபுரம் சார்பதிவாளர் மூலம் மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான ஆதாரங்களை தலைமை செயலர், சென்னை காவல் துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலர் ஆகியோருக்கு மார்ச் மாதம் 12ஆம் தேதி அறப்போர் இயக்கம் புகாராக அனுப்பியது.
மேலும், இந்த குற்றச்சாட்டு இந்த புகாரை விசாரித்த திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலை வர், இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளதாகவும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திமுக அரசுக்கும் தமிழக பாஜக எம்.எல்.ஏ. மகனுக்கும் என்ன டீல் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: தங்கம் தென்னரசு - நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, சென்னையில் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை ஒரு மோசடி பேர்வழியுடன் இணைந்து சார்பதிவாளர் துணையுடன் மோசடி ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளார். அறப்போர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து இந்த பதிவை ரத்து செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் அறிக்கை அளித்து 45 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இது வரை திமுக அரசு இந்த மோசடி பதிவை ரத்து செய்யவில்லை. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது FIR போடவில்லை. ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், திமுக அரசுக்கும் தமிழக பாஜக எம்.எல்.ஏ., மகனுக்கும் என்ன டீல் என கேள்வி எழுப்பியுள்ள அறப்போர் இயக்கம், எதற்காக இந்த மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்? அமைச்சர் மூர்த்தி மற்றும் ஜோதி நிர்மலாசாமி IAS நடவடிக்கை எடுப்பதாக சொல்லிய 15 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. மோசடி இங்கே, நடவடிக்கை எங்கே?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன், பத்திரப்பதிவு துறையில் அறப்போர் இயக்கம் பள்ளிகரணை சதுப்பு நில ஊழல், பரந்தூர் நில ஊழல், பிஎசிஎல் நில மோசடி ஊழல், திருச்சி ஜெ.ஜெ சுல்லூரி நிலத்தை மோசடியாக காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு செய்த மோசடி. ஜெ.ஜெ கல்லூரி 15.04 ஏக்கர் நீர் நிலையை பதிவு செய்த மோசடி மற்றும் நயினார் நாகேந்திரன் மகன் செய்த 100 கோடி மதிப்பு சென்னை நிலத்தை ராதாபுரத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது என பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தின் மீதும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேகப்படுத்த வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.