அமைச்சர் சேகர்பாபு, சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். இந்த மனிதாபிமான செயல், திராவிட மாடல் அரசின் மத நல்லிணக்கக் கொள்கையை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும் . ஆன்மிகம் சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் எந்த மாநில மக்களாக இருந்தாலும், பிற நாடுகளாக இருந்தாலும் உதவுகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசாகும். இலங்கையில் இயற்கை சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுப்பி வைத்ததை இந்த நேரத்தில் மனிதநேயத்தோடு கூற கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
அதேபோல் ஆண்டுதோறும் ஐயப்பன் மலர் வழிபாட்டினை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி, அதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்ப மலைக்கு சென்று வருகின்ற 108 குருசாமிகளுக்கு பொன்னாடை மற்றும் ஐயப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையையும் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டும் ஐயப்பன் மலர் வழிபாடு விரைவில் கொண்டாடப்படும்.
தமிழகத்தை பொறுத்த அளவில் நான் பலமுறை சொல்லியது போல், ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள். செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


