தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பாலியல் புகார்கள்
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் இழைக்கப்படும் பாலியல் குற்றங்களால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குற்றங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக, பாஜக சார்பாக தொடர் போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.

அன்பில் மகேஷ் பதவி விலகனும்
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
