தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு ? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
வராண்டாவில் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை
விழுப்புரம் மருத்துவமனையில் அறுவை மூலம் குழந்தை பெற்ற தாயை பச்சிளங் குழந்தையோடு தரையில் படுத்திருப்பது போல காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில், படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக, அறுவை சிகிட்சை மூலம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளங்குழந்தை தன் தாயுடன், எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சி கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பாதாளத்தில் அரசு மருத்துவமனை
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு என்று ஊரை ஏமாற்றி வருகிறது ஊழல் திமுக அரசு. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து துயர சம்பவங்கள் நடந்த பிறகும், அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஊழல் வழக்கில் கைதான சாராய அமைச்சருக்குக் கூட தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை வேண்டும் என்று கேட்டதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியினர் நடத்திவரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக? என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
