சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் அரசுப் பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்? 16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம்.

தமிழக பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியில், நமது குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையே நீங்கள் தான் காப்பாற்றியாக வேண்டும். இன்று அரசுப் பள்ளி வரை வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நம் வீடு வரை வர வெகுநாட்கள் ஆகாது. இந்தக் கையாலாகாத திமுக அரசையோ, அதன் ஏவலாளியாகவே மாறிவிட்ட தமிழக காவல்துறையையோ, இனியும் நம்பி பலனில்லை. குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை தயவுசெய்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்திருங்கள்.

இந்த போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.