ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு குறித்து தமிழக அரசு பொய் சொல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் விளக்கங்களை மறுத்துள்ள அவர், அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் அறிவுறுத்தினார்.
Foxconn investment in Tamil Nadu : ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக தொழில் முதலீடுகள் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணிக்கும், அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடுகள் கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும்; கண்டிப்பாக வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறியிருக்கிறார். அந்த முதலீடுகள் எப்படி வரும்? என்பதைத் தான் கூற மறுக்கிறார். அமைச்சர் கூறுவதைப் பார்க்கும் போது, நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது என்று குடுகுடுப்பைக்காரர் கூறுவதைப் போலத் தான் இருக்கிறது. டி.ஆர்.பி. இராஜா அமைச்சரைப் போல தெளிவாகக் கூற வேண்டும்; ஜோதிடம் கூறுவதைப் போல பேசிக் கொண்டிருக்கக்கூடாது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக தொழில் முதலீடுகள்
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்த சிக்கலில் அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா நிமிடத்திற்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த 14-ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பான எனது குற்றச்சாட்டுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கத்தையும் அளிக்க முடியாத அமைச்சர், தேவையில்லாமல் குடும்ப சிக்கலை இழுத்தார். சட்டப்பேரவையில் நேற்று இது குறித்து விளக்கமளிக்கும் போது முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும், முதலீடு செய்யப் போவதில்லை என்று கூறிய ஃபாக்ஸ்கான் நிறுவனமும் வேறு வேறு என்று கூறுகிறார். திமுகவின் ஐ.டி, அணி தலைவராக இத்தகைய தகவல்களையெல்லாம் கூறி மற்றவர்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம்; அமைச்சராக இது போல ஆதாரமற்ற தகவல்களைக் கூறக் கூடாது.
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 13&-ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி இராபர்ட் வூ சந்தித்து பேசினார். அப்போது தான் ரூ.15,000 கோடி முதலீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் இராஜா தெரிவித்திருந்தார். அதைத் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருந்தது. அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது உண்மை; ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்றும் அறிக்கை மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெளிவுபடுத்தி விட்டது. முதலீடு, சந்திப்பு ஆகிய இரு நிகழ்வுகளையும் ஃபாக்ஸ்கான் ஒரே அறிக்கையில் விளக்கியிருக்கும் நிலையில், எப்படி அவை இரு வேறு ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்க முடியும்?
தொழில் முதலீடுகள் குறித்த பொய்- அன்புமணி
தொழில் முதலீடுகள் குறித்த பொய்களை மூடி மறைப்பதற்காக இப்போது Geopolitical issues என்ற புதிய போர்வையை திமுக அரசு கைகளில் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிலும் செயல்படும் நிறுவனங்களால் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதாம். தொழில் முதலீடுகள் எனப்படுபவை துணியைப் போட்டு மூடிக் கொண்டு கைகளின் விரல்களை பிடித்து விலை பேசும் மாட்டுச் சந்தை பேரம் அல்ல.... அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான எந்த பரிமாற்றங்களும் வெளிப்படையாகத் தான் இருக்க வேண்டும். இவற்றில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை.
ஒருவேளை வாதத்திற்காகவே அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா கூறுவதைப் போல Geopolitical issues காரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் முதலீட்டை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என்றே வைத்துக்கொள்வோம். இனி வரவிருக்கும் அந்த முதலீட்டுக்காக தமிழக அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமே செய்து கொள்ளாதா? அப்போது இந்த விவரங்கள் வெளியுலகத்திற்கு தெரிந்து விடாதா? இல்லையென்றால், Geopolitical issues காரணம் காட்டி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமல், அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமல், தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்காமல் தமிழக அரசு அனுமதித்து விடுமா? அவ்வாறு செய்வதற்கு தமிழ்நாடு என்ன திமுகவின் குடும்ப நிறுவனமா?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் வந்தால் அதைக் கண்டு மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், வராத தொழில் முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் போது , பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அந்த மோசடிகளை அம்பலப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? தமிழ்நாட்டுக்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் தான் கையெழுத்தாகியுள்ளன. ஆனால், அதன் மூலம் 34 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா அவர்களும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடவில்லையா?
தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு?
இவ்வளவு வீர வசனம் பேசும் அமைச்சர் இராஜா அவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு? அவற்றை கொண்டு வந்த நிறுவனங்கள் எவை? ஒவ்வொரு நிறுவனமும் எங்கெங்கு எவ்வளவு முதலீடுகளை செய்து தொழிற்சாலைகளை அமைத்துள்ளன? அவற்றின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் விவரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயங்குவது ஏன்? இதை செய்ய அவரை எந்த Geopolitical issue தடுக்கிறது?
மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை திமுக அரசு கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வரவேற்பேன். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு அரசு செலவில் சுற்றுலா சென்று திரும்பி விட்டு, முதலீடுகள் குவிந்து விட்டன என்று கதை, திரைக்கதை எழுதி வசனம் பேசினால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இனியாவது மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
