கலகக்குறல் எழுப்பிய செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபி செட்டிப் பாளையத்தில் மாஸ் எண்ட்ரி கொடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அதிமுக.வில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காரணத்தால் அதிமுக.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. செங்கோட்டையனின் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மாற்று நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது.

மேலும் கெடு விதித்ததோடு நிறுத்தாத செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டு அடுத்தடுத்து அதிரடி காட்டினார். மேலும் செங்கோட்டையன் தனது அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப் பாளையத்தில் அவருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை மழுங்கடிக்கும் பணியை பழனிசாமியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோபிசெட்டிப் பாளையம் வழியாக சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

தலைமறைவான செங்கோட்டையன்..?

எடப்பாடி பழனிசாமி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் முன்னதாகவே கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.