ஊட்டிக்கு ஜாலி ட்ரிப் போன நண்பர்கள்… கார் கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. 5 பேர் பலி !!
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சுற்றுலா சென்ற கார் பெரும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற 5 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜுடு, பாஷா என்பவர்கள் உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் கடந்த 1 ஆம் தேதி உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். முதலில் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் 2 ஆம் தேதி மசினகுடியில் உள்ள ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
பின்னர் அவ்ர்கள் நேற்று மாலை முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தையும் சுற்றிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் நேற்று இரவு அறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் இந்த இளைஞர்களின் செல் போன்களுக்கு போன் செய்தனர். அதனை அவர்கள் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இந்நிலையில் மசினகுடி அருகே ஜுடு உள்ளிட்டோர் சென்ற கார் ர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. நேற்று இரவு நிகழ்ந்த விபத்து பற்றி இன்றுதான் வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது.
7 பேர் சென்ற கார், கல்லட்டி மலை பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. 35வது கொண்டை ஊசி வளைவில் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து இளைஞர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது