7 மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யுமாம்!! புயலுக்குப் பிறகும் மழை கொட்டும்…. எச்சரிக்கை…
கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கும் அதிகமாக மழைபெய்யும். காரைக்கால் மாவட்டத்திலும் 20 செ.மீ., க்கும் அதிகமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், கேரளா, ஆந்திரா, ராயலசீமாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் யுல் கரையைக் கடந்த பின்பும் ஆடத்த நாள் அதாவது நாளையும் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.
கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் மணிக்கு 45 - 55 கி.மீ., ஆக இருக்கும். 65 கி.மீ., வரை காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவ.,15 ம் தேதி மாலை இது படிப்படியாக 80 முதல் 90 கி.மீ., வரையிலும், பின்னர் 100 கி.மீ., வரையிலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் உள்ளவர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரையும் 3 மணிக்கே வீ்ட்டிற்கு அனுப்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது