தமிழகத்தின் 43 சதவீதம் கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளை பயன்படுத்தத் திட்டமிடுவது தொடர்பான பயிலரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தேசிய கடற்புர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் அறிக்கையும் அமைச்சர் வேலு வெளியிட்டார்.

1901ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு சராசரியாக 1.3 மில்லி மீட்டர் உயர்ந்து வந்துள்ளது. இதுவே 2006ஆம் ஆண்டிலிருந்து முதல் 2018ஆம் ஆண்டு வரை 3.7 மில்லி மீட்டராகக் கூடியுள்ளது என்று அந்த அறிக்கை சொல்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது: பிரதமர் மோடி நம்பிக்கை

கடல் நீர்மட்டம் இதுவரை காணாத அளவு அதிகமாகி வருவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 6,632 கி.மீ. தொலைவுக்கு கடற்கரைப் பகுதிகள் உள்ளன. இதில் 33% சதவீதம் அரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 991 கி.மீ தொலைவு கடற்கரைப் பகுதியில் 423 கி.மீ. கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டவை. அதாவது தமிழகக் கடற்கரையில் 42.7 சதவீதம் அரிக்கப்பட்டுள்ளது.

கடல் அரிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா ஆகியவை உள்ளன. மேற்கு வங்கத்தில் 60.5 சதவீதமும் புதுச்சேரியில் 56.2% கேரளாவில் 46.4 சதவீதமும் கடற்கரைப் பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளன.

ஓசூரில் 4 நாட்கள் வரை தாக்குபிடிக்கும் “ரெடிமேட் இட்லி” உணவு பிரியர்கள் அதிர்ச்சி

புயல், சூறாவளி, அலை வீச்சு போன்ற இயற்கைக் காரணங்களாலும் துறைமுகக் கட்டுமானப் பணிகள், கடல் சுவர்கள், கடற்கரையில் மணல் அள்ளப்படுதல் போன்ற பிற காரணங்களாலும் கடல் அரிப்பு அதிகமாகியுள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய கடற்புர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் ஐந்து செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடற்கரைப் பகுதியில் குறுகிய கால மற்றும் நீண்ட கால மாற்றங்களை அறியும் நோக்கில் 526 கடற்கரை வரைபடங்களை உருவாக்கியுள்ளனர். அதில் தமிழகக் கடலோரப் பகுதிகளைச் சித்தரிக்கும் 80 வரைபடங்களும் இதில் அடங்கும்.