அபுதாபி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ.3500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.முன்னதாக அமீரக நவீன தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார்.
துபாய் சர்வதேச கண்காட்சி:
துபாயில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக ஜக்கிய அரசு அமீரகம் சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். இதனைதொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி, துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார துறை அமைச்சர்களுடனான ஆலோசனை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை:
அந்த ஆலோசனையில், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் பேச்சு:
மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் சூழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரங்க திறப்பு:
இதனையடுத்து அன்று மாலை, சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உலக அளவில் 192 நாடுகள் பங்கேற்கும் இந்த சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

முதலீட்டாளர்கள் சந்திப்பு:
தொடர்ந்து மறுநாள் , துபாயில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட பேசிய முதலமைச்சர், தமிழகத்திற்கும் துபைக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபாய் வந்துள்ளதாகவும், இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் பேசினார். முன்னதாக ரூ.2600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்துதாகின.

ரூ3,500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்:
அதை தொடர்ந்து இன்று அபுதாபி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்தார். பின்னர், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்தில் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
