நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 3 வாலிபர்களைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர்(வயது 45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் டவுண் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், மற்றும் இசக்கிமுத்து, முத்துக்குமார், மற்றும் ஒரு சிறார் என்பது அடையாளம் தெரிந்தது.

இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதும், ஏர்வாடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.

அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சார்பில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த கும்பல் சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகர போலீஸ் தனிப்படை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விரைந்தது. அங்கு நேற்று காலை முதல் முகாமிட்டு தீவிரமாக தேடிய நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை இன்று காலை நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சிறாரை தேடி வருகின்றனர்.