வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது செவிலியர்கள் கத்தரிக்கோல் பயன்படுத்தியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டது. 

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிவேதா கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கட்டை விரலை வெட்டிய செவிலியர்

பின்னர் பிரசவ அறையில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி குளுக்கோஸ் ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்ற இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளினால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோளை பயன்படுத்தி கட் செய்யும் போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டை விரல் துண்டாகி உள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அலறிய படி கத்தியது.

உறவினர்களை சமாதானம் செய்த டீன்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்த பின் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை

இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் கவனக்குறைவால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.