பேத்தமங்களம் அணை உபரிநீர் வெளியேற்றத்தாலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆந்திரா எல்லை பகுதியான பெறும்பள்ளம் என்ற இடத்தில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பேத்தமங்களம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் அதிக அளவு வெள்ளம் வர வாய்ப்புள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராமங்களான புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவரங்கும்பம், வடக்குபட்டு, இராமநாயக்கண்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி ஏக்லாஸ்புரம், தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, வாணியம்பாடி நகரம் உதயேந்திரம், கிரிசமுத்திரம், மற்றும் வளையாம்பாட்டு ஆகிய கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று கிராம பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாணியம்பாடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பகலில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்குவது தொடர்கதையாக இருந்து. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
