கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரௌடி சிசிடிவி கேமரா,  டேபிள், சேர்  உள்ளிட்ட பொருட்களை சேதபடுத்தி அட்டகாசம் செய்த ரௌடி கைது.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 45). இவர் கோவில்பட்டி - கடலையூர் நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒத்தக்கடை என்ற பெயரில் கடந்த 15 வருடங்களாக உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த ரௌடி மதன்குமார் அடிக்கடி வந்து சாப்பிட்டு விட்டு செல்வாராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்து 700 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக கிளர்ச்சி; நூற்றுக்கணக்கான விவசாயி கூலி தொழிலாளர்கள் கைது - நாகையில் பரபரப்பு

இந்நிலையில் நேற்று மாலையில் ஒத்தக்கடை உணவகத்திற்கு கஞ்சா போதையில் வந்த ரௌடி மதன்குமார், சொடக்கு போட்டு இரண்டு புரோட்டாவும், ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் அருணாசலம் பழைய பாக்கியான 700 ரூபாயை கொடுத்தால் புரோட்டா தருகிறேன் என கூறியுள்ளார். நான் புரோட்டா கேட்டா தரமாட்டியா என ஆபாசமாக பேசியபடியே அங்கிருந்து சென்ற ரௌடி மதன்குமார் சற்று நேரத்திலேயே திரும்பி வந்து சட்டைக்கு பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து உணவகத்தில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கேமரா ஹார்ட் டிஸ்க் கேபிள் வயர்களை அறுத்து எரிந்துள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து துவம்சம் செய்து சூறையாடி உள்ளார். பின்னர் தலைக்கு மேலே அரிவாளை சுற்றிக்கொண்டு, நான் எப்ப வந்தாலும் புரோட்டா கொடுக்கணும். இல்லைனா நான் உன் தலையை வெட்டி ரோட்டில் வீசிடுவேன் என ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்

தொடர்ந்து அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளார். ரௌடி மதன்குமார் அரிவாளுடன் அட்டகாசம் செய்து வருவதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்.ஐ. நிர்மலா தலைமையிலான போலீசார் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ரௌடி மதன்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். 

உணவக உரிமையாளர் அருணாசலம் அளித்த புகாரின் பேரில் ரவுடி மதன்குமார் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரௌடி மதன்குமாரை கைது செய்தனர்.