தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில், வேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலைமை காவலர் ஒருவர் 17 வயது சிறுவனை தனது பைக் சாவியில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேசன்(41). இவர் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அதிவேகத்தில் வந்த பைக்

அப்போது அங்கு செந்தில்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அப்போது ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து

இந்த சமயத்தில் செந்தில்குமாரின் சகோதரர் அர்ச்சுனன் என்ற 17 வயது இளைஞர் அங்கு வந்துள்ளார். இவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் தலைமை காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை காவலர் சிவனேசன் தனது பைக் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ச்சுனனை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் அர்ச்சுனன் வலியால் துடித்துள்ளார்.

தலைமை காவலர் கைது

இதையடுத்து அர்ச்சுனன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை காவலர் சிவனேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.