கீழ்பென்னாத்தூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். விவசாயி பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் மோகனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாவும் கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மகள் உமாதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை ஏழுமலை கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. விக்னேஷ் மற்றும் உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளதால் அடுத்ததும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று கண்டறிய கணவர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கருவில் இருப்பது பெண் சிசு என்பது தெரியவந்தது.

கருவை கலைக்க சொல்லி டார்ச்சர்

இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்கும் படி வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை அணுகி உமா தேவியின் கருவை கலைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த உமாதேவி பெண் குழந்தையுடன் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 பேர் கைது

இதையடுத்து உமாதேவி, கணவர் விக்னேஷ் (27), மாமனார் ஜெயவேல்(58) மற்றும் மாமியார் சிவகாமி(43) மற்றும் கருவை கலைக்க முயற்சிக்க உதவிய அதே ஊரை சேர்ந்த சாரதி(39) ஆகிய 4 பேரை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.