- Home
- Tamil Nadu News
- திருவண்ணாமலை
- Pournami Girivalam: ஆடி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு.. தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்
Pournami Girivalam: ஆடி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு.. தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்
Southern Railway: திருவண்ணாமலையில் ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் மாதந்தோறும் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் கிரிவலம் வருகின்றனர்.
அந்த வகையில் ஆடி மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 29ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது 29-ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

