திருவள்ளூர் அருகே பச்சிளம் பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற தம்பதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன்(20). இவரது மனைவி லட்சுமி(19). இந்த தம்பதியினருக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருவள்ளுர் அருகே இருக்கும் புட்லூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த இருவரும் குழந்தையை விற்க முயன்றுள்ளனர். 7 ஆயிரம் ரூபாய்க்கு பெண்குழந்தையை விற்கப்போவதாக இளம்ஜோடிகள் தெரிவிப்பதாக குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து குழந்தைகள் காப்பக மைய நிர்வாகிகள் புட்லூர் ரயில்நிலையத்திற்கு காவலர்களுடன் விரைந்து வந்தனர். அங்கு சுற்றித்திரிந்த இரண்டு பேரையும் பிடித்த காவல்துறையினர் திருவள்ளுர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். குழந்தையை மீட்ட காவலர்கள் அருகில் இருக்கும் காப்பகத்தில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் தாயும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டிருக்கும் பக்ருதீனிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு இளம்ஜோடி விற்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.