டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமதி (30) என்ற மனைவியும், ருஜன்யா (7) என்ற மகளும், கந்தசாமி என்ற ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நெல்லையப்பன் 11 மணியளவில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் பல கோடி ரூபாய் பணம் பறித்து என்னை கடனாலியாக ஆக்கிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை ஏற்கவில்லை. 

இதனையடுத்து ஆத்திரமடைந்த நெல்லையப்பன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தீ வைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் நீதிபதியிடம் நெல்லையப்பன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். 

இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நெல்லையப்பனை அனுப்பினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லையப்பன் தீக்குளிக்கும் முன், பார் உரிமையாளரின் அடாவடி, போலீசாரின் லஞ்சம் பறிப்பு என, தனக்கு நேர்ந்த கொடுமைகளை, சமூக வலைதளமான, பேஸ்புக்கில், 'வீடியோவாக பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பார் உரிமையாளர் ஆனந்த், மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் கண்ணன் மீது வழக்குபதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.