சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கிடா வெட்டி விருந்து வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது

பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளையும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமையாகும் அரசு அதனை வழங்க தவறும் போது மக்கள் அரசு மீது அவநம்பிக்கை மேற்கொள்கின்றனர் அந்த வகையில், சேலத்தில் 30 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி போராடிய மக்களுக்கு இன்று விடிவு பிறந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்ட பகுதிக்குட்பட்ட சுப்புராயன் நகர் பகுதியில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்போதைய நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது

பொதுமக்களின் தொடர் முயற்சி செய்தும் சாலை வசதி கிடைக்காத்தால் அவர்கள் நம்பிக்கை இழந்தனர். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற தெய்வலிங்கம் என்பவர் சம்பந்தப்பட்ட சுப்ராயன் நகர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதி அமைத்து தரப்படும் என தேர்தலின்போது, வாக்குறுதியாக அளித்திருந்தார்.

அதன்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக கோரிக்கை மனு அளித்து அந்த பகுதி மக்களுக்கு சாலை வசதி கிடைக்க அவர் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, சுப்புராயன் நகர் பகுதியில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக கடும் போராட்டத்திற்கு இடையே, சாலை கிடைத்த மகிழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு விழாவாக அதனை கொண்டாட முடிவு செய்தனர் 

இதனையடுத்து சாலை அமைக்க காரணமான சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரை அழைத்து, அவர்கள் கைகளால் சாலையை திறக்க வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கிடா வெட்டி அறுசுவை அசைவ விருந்து வைத்து அசத்தினர்.

கோழிக்கறி, சப்பாத்தி, நெய்: ஏ கிளாஸில் செந்தில் பாலாஜிக்கு சிறையில் கிடைக்கும் வசதி!

அதோடு மட்டுமல்லாமல் ஊர் மக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகால கனவு நிறைவு பெற்றதையடுத்து, பொதுமக்கள் அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடாவெட்டி விருந்து வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சம்பவம் அந்த பகுதியில் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், வழங்க வேண்டிய உரிமைகள் 30 ஆண்டுகளுக்கு பின் கிடைத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு அவர்கள் ஏற்று கொண்டுள்ளனர். சாலை வசதி காலம் கடந்து கிடைத்தாலும், தற்போது முழு பயனையும் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் பாராட்டுக்களை இந்த பகுதி மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல சாலை வசதி செய்து கொடுத்ததிற்காக ஊர் மக்களே ஒன்று திரண்டு அதிகாரிகளுக்கு கிடாவெட்டி விருந்து வைத்த சம்பவம் சேலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.