திமுக இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்று உள்ளதாகவும், இனி வீதியில் நடந்து சென்றாலே வரி செலுத்தும் நிலை வரும் என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமுத்தூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. எடப்பாடி நகரச்செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து
விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை, அதனால் ஏற்படும் வன்முறைகள், கொலைகள் போன்ற செய்திகளே டிவியில் வருகிறது என்றா்.

ஜெயலலிதா இருந்து போதும், இறந்த பிறகும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது என்றார். 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி தந்துள்ளதாக முதல்வர் சொல்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து துறையிலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்கிற நிலை உள்ளது என குற்றம் சாட்டினா். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் விமர்சித்தார்.

மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். 100 யுனிட் இலவச மின்சாரம் கொடுத்தது அதிமுக அரசு. ஆனால் திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யப்படும் என்றார். ஆனால் இதுவரை செய்யவில்லை. வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு கூட வரி வசூல் செயகின்றனர். இனி வீதியில் நடப்பதற்கு கூட வரி விதித்து விடுவார்கள் என்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


தொடர்ந்து பேசிய அவர், 30 ஆயிரம் கோடி ஊழல் பணம் வசூல் செய்த அரசு திமுக அரசு. இதை நான் சொல்லவில்லை நிதித்துறை அமைச்சரே சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது. அதிமுக பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைக்கிறது; அதிமுக கொண்டுவந்த திட்டங்களை வேண்டும் என்றே 2 ஆண்டுகள் காலம் தாழ்த்தி தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

திமுக அரசு 2 ஆண்டுகளில் செய்த சாதனை மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டியதுதான். அம்மா உணவகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை. 6 ஆயிரம் பிராந்தி கடையில் 4 ஆயிரம் பிராந்தி கடைகள் 2 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் 20 ஆயிரம் கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக கேள்வி கேட்ட பின்னர் கண்துடைப்புக்கு சிலவற்றிற்கு சீல் வைத்தனர்.

ரூ.30,000 கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்! இபிஎஸ் விளாசல்!

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வேண்டும் என வெளிப்படையாக கேட்கிறார்கள். கஞ்சா போதையில் சிறுவர்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் தவறு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர். சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்காமல் தகராறு செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறை போல இருந்தது. திமுக அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம்; ஸ்டாலின் குடும்பத்துக்கு யாரும் இதை பட்டா போட்டு தரவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.