சேலம் மாவட்டம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே சுற்றுலா சென்ற காரும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபர், பெரியநாயகம் மற்றும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் இரண்டு நண்பர்கள் என ஐந்து நபர்கள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் கருப்பூர் பொறியியல் கல்லூரி அருகே கார் வந்துகொண்டிருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்த முயன்ற போது டிப்பர் லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் நசுங்கி விபத்துக்குள்ளானது. இதில் கிறிஸ்டோபர் மற்றும் பெரியநாயகம் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிறிஸ்டோபர் உடல் பாகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும் காரில் பயணித்த மூன்று நபர்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கருப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் கேரளா சுற்றுலா செல்ல வந்தவர்கள் விபத்துக்குள்ளாகி இருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.