Sexual Abuse: நாகையில் கண்ட இடத்தில் கை வைத்த காமுகன்; பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பிய மூதாட்டி
நாகையில் லிப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்த மூதாட்டிக்கு கால் முறிவு.
![an old woman sexually harassed by young man in nagapattinam vel an old woman sexually harassed by young man in nagapattinam vel](https://static-ai.asianetnews.com/images/01j21ch04y7qjdpdq8a6dc1k8y/whatsapp-image-2024-07-05-at-16-49-40_363x203xt.jpg)
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வாசுகி (வயது 60). இவர் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை இரவு நாகை பாப்பாகோவிலில் உள்ள தர்காவில் இரவு படுத்து உறங்கிவிட்டு அதிகாலை வடக்காலத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 21ம் தேதி அதிகாலை பாப்பாகோவிலில் ஆட்டோவுக்காக நின்றிருந்தவரை அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்ந இளைஞர் உங்க ஊருக்குதான் செல்கிறேன் என கூறி மூதாட்டியை தனது இருச்சக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மூதாட்டிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டியை அடித்தும், மிரட்டியும் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் புதுச்சேரி அருகே வரும் போது அந்த இளைஞரிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனத்தில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மூதாட்டியை அடித்து கீழே தள்ளி இருச்சக்கர வாகனத்தை அவர் மீது ஏற்றி உள்ளார்.
அப்போது அவ்வழியாக ஆட்கள் வரவும், அந்த இளைஞர் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது. மூதாட்டி மீது இருச்சக்கர வாகனத்தை ஏற்றியதில் மூதாட்டியின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது வரை தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதிலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருச்சக்கர வாகனத்தில் மூதாட்டியை அழைத்துச் சென்றது பெரிய நரியங்குடி பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பதும், அவர் அதே பாப்பாகோவிலில் சலூன் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் மூதாட்டி தனிமையில் செல்வதை அறிந்து தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரி வந்துள்ளது.
கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த குமரவேல் தலைமறைவாகி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவரின் மகன் கூறும் போது, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து குற்றவாளியை நாங்களே கண்டுபிடித்து அடையாளம் காட்டிய பிறகும் இது நாள்வரை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். இந்த புகார் குறித்து கீழ்வேளூர் போலீசாரிடம் விசாரித்த போது குற்றவாளியை அடையாளம் கண்டு கொண்டதாகவும், தற்போது தலைமறவாகி உள்ளவனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர். நாகை அருகே இருச்சக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தப்பிக்க முயன்றவர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.