மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவனை கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 5 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவருக்கு மதுரை பைபாஸ் சாலை பகுதியில் வணிக வளாகம், வீடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி நேற்று மாணவன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென ஆட்டோவை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்த்து மாணவனையும் கடத்தி உள்ளனர். பின்னர் மைதிலி ராஜலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பணம் கொடுத்தால் தான் உங்கள் மகனை விடுவிப்போம் என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.

சீமான் ஒரு அரசியல் அரைவேக்காடு; அவருக்கு நாவடக்கம் தேவை - அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

உடனடியாக சுதாரித்துக் கொண்ட தாயார் மைதிலி ராஜலட்சுமி கடத்தல் சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறிதும் தாமதிக்காமல் ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை விரட்டிச் சென்றது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை என செய்தி வராத நாளே இல்லை; முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை காட்டம்

காவல் துறையினர் தங்களை பின்தொடர்வதை அறிந்த கொள்ளையர்கள் உடனடியாக பள்ளி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கிஷோர் என்பவரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 நபர்களை 3 தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.