எப்படிங்க நீங்க ராகுல் காந்திய புகழ்ந்து சொல்லலாம்? செல்லூர் ராஜூவுக்கு டோஸ் விட்ட அதிமுக தலைமை?
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகழ்ந்திருந்த நிலையில், இன்று அந்த பதிவை நீக்கி உள்ளார்.
![former aiadmk minister sellur raju removes a post about congress mp rahul gandhi in social media vel former aiadmk minister sellur raju removes a post about congress mp rahul gandhi in social media vel](https://static-ai.asianetnews.com/images/01hyfwqbz9z5qvaf0qgfah5mxb/mixcollage-22-may-2024-03-44-pm-6719_363x203xt.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து தனது சமூக வலைதளப்பக்கமான, எக்ஸ் தளத்தில் புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், நான் பார்த்து வியந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று புகழ்ந்திருந்தார். தற்சமயத்தில் காங்கிரஸ், அதிமுக இடையே நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணியும் இல்லை. மாறாக காங்கிரஸ், அதிமுகவின் பகையாளியான திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. குறித்து செல்லூர் ராஜூ திடீரென புகழ்ந்திருந்தது பேசுபொருளானது.
செல்லூர் ராஜூவின் பதிவிற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், இந்த பதிவு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. தற்செயலாக நான் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் முன்னாள் பிரதமரின் மகனான ராகுல் காந்தி எளிமையாக உணவகத்திற்கு சென்று உணவு அருந்துவது என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அதன் அடிப்படையில் அந்த வீடியோவை எனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன் மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அதிமுக மூத்த தலைவர்களிடையே இந்த பதிவு நெருடலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவர்கள் மூலமாக செல்லூர் ராஜூவை தொடர்பு கொண்ட அதிமுகவின் மூத்த சகாக்கள் நமது கூட்டணியில் இடம் பெறாத ஒரு கட்சியின் தலைவரை இப்படி புகழ்ந்து பேசுவது ஏற்புடையது இல்லை என்று கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து அந்த பதிவை நீக்கி உள்ளார். இதற்கு அதிமுக மூத்த தலைவர்களின் அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.