திருக்கழுக்குன்றம் அருகே மின்சாரம் தாக்கிய பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 50). இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது சுலோச்சனாவுடன் அவரது பேரன் 8ம் வகுப்பு படித்து வரும் சபரிவாசன்(13) என்பவரும் சென்றுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின் கம்பி அறுந்து சபரிவாசன் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி துடித்ததைப் பார்த்த பாட்டி சுலோச்சனா பேரனை காப்பாற்ற மின் கம்பியில் இருந்து தூக்கி அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின் வயர் சுலோச்சனாவின் காலில் சுற்றிக் கொண்டது. இதில் மின்சாரம் தாக்கி சுலோச்சனா சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த பேரன் சபரிவாசன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அதிகாரிகள் ஆய்வு

இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கியதில் இருந்து பேரனை காப்பாற்ற பாட்டி இறந்துப் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மின் கம்பி பழுதடைந்துள்ளது எனவும், அவற்றை மாற்றக் கோரி பலமுறை மனு அளித்திருந்த நிலையில் திருக்கழுக்குன்றம் மின்வாரியத்தின் அலட்சியப் போக்கால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

13 வருடங்களாக பார்க்க வராத தந்தை; ஏக்கத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு - குடும்பத்தினர் சோகம்